<$BlogRSDURL$>

ஆபாசம், அல்லது தெய்விகம்

இந்திரா பார்த்தசாரதி

பெயரில் நட்புரிமை தெரிகிறதே தவிர, பேச்சில் அது தெரியவில்லை, 'சிநேகன்' என்ற பெயரைக் கொண்ட திரைப்படப் பாடலாசிரியருக்கு. ஆபாசமாகக் கவிதை எழுதுகிற பெண்களை மௌன்ட் ரோடில் நிற்க வைத்து, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த வேண்டுமென்று, அவர் ஆசையையோ, கோபத்தையோ ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் வெளியிட்டிருக்கிறார்.
'ஆபாசம்' என்றால் என்ன? மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி, சல்மா, உமா மகேஸ்வரி போன்ற கவிஞர்கள் மீது கொஞ்ச நாட்களாக - இந்த 'ஆபாச' குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள் சில மூத்தக் கவிஞர்களும், திரைப்படப் பாடலாசிரியர்களும். பெண்களின் சொல்லப்படத்தகாத உறுப்புக்களையும், பாலியல் விவகாரங்களையும், பெண் கவிஞர்களே சொல்வதுதான், இவர்களுக்கு 'ஆபாசமாக'ப்படுகிறது. ஆண்கவிஞர்கள் விவரித்துச் சொல்லவேண்டிய விஷயங்களைப் பெண்கள் சொல்லிவிட்டால், ஆண்களின் copyright உரிமை பறிபோய்விடுமே என்ற அச்சமாகவுமிருக்கலாம்.

ஆபாசமாக எழுதப்பட்ட நூல்கள், ஆசாரமாக எழுதப்பட்ட நூல்கள் என்று எதுவுமில்லை, நன்றாக எழுதப்பட்டவை, மோசமாக எழுதப்பட்டவை என்ற இரண்டு வகைதான் உண்டு என்று ஆஸ்கார் வொய்ல்ட் கூற்றைச் சற்று மாற்றிச் சொல்வதில் தவறு ஏதுமில்லை. ரவி சுப்ரமணியன் சொல்வது போல், காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக, சொல்லக்கூடாதவற்றைச் சொல்வோம் என்ற கோபத்தில், இப்பெண்கள் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பது, இவ்வாறு எழுதுவது ஆபாசந்தான் என்பதை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடும். ஆண்கவிஞர்கள், பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை விவரித்துச் சொல்லும்போது அது அழகியல் உணர்வில் விளைந்த பரவசம், பெண்கள் தங்கள் உறுப்புக்களைத் தாங்களே சொல்லும்போது, அது ஆபாசம் அல்லது எதிர்ப்பு உணர்வின் அடையாளம் என்று ஆகிவிடுமா?

கி.பி. எட்டாம் நூற்றாண்டில், ஒரு பெண்கவிஞர் எழுதிய கவிதை இது:

'வெற்றிக் கருளக் கொடியான்தன் மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே!
குற்றம் அற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டிரே!'

இந்தப் பெண்கவிஞர், சம காலத்திய ஆண் வர்க்கத்திடம் அசாத்திய கோபப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தாமே கற்பித்துக் கொண்ட மானசீக புருஷன் ஒருவன்தான் அக்காலப் பெண்களின் சமுதாயக் கனவு. ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் அவன்தான் வடிகால்.

சமகாலத்திய ஆண்களைத் துச்சமாகக் கருதுவதற்கேற்ற ஒரு பெண்மைச் செருக்கு இவருக்கு இருக்கிறது. அவர் பாடலைப் பாருங்கள்:

'அங்கைத் தலத்தில் ஆழிகொண்டான் அவன் முகத்து அன்றி விழிப்பேன் என்று,
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம், இவை நோக்கிக், காணீர்! கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா;
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.'

அந்தக் காலத்துச் 'சிநேகர்களும், பழனிபாரதிகளும்', இந்த மாதிரிப் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட முடியாத காரணத்தினால், சமயத்தளைப் பூட்டி, தெய்வங்களாக ஆக்கிவிட்டார்கள்.

ஆண்டாள், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்!

நன்றி: http://samachar.com/tamil/features/110304-Ipa.html

ஆபாசத்திற்கு ஆடை கட்டுகிறோம் என அதை அதிகம் கொச்சைப் படுத்துகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை உறுதிப் படுத்துவது போலத்தான் இந்த கட்டுரையாளரும் எழுதியுள்ளார். What a punching finish!!

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com