கவியரசு கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பாடலில் நாத்திகக் கேள்விகளுக்கு நாசூக்காக அமைந்த பதில்களைப் பார்த்ததும் உடன் அதனை இங்கே பதிக்கத் தோன்றியது.
கடவுள் இருக்கின்றான் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?
இருளில் விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் இசையின்
உருவம் வருகின்றதா?
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் அவன்தன்
போதனை மறைகின்றதா?
என்னவொரு வார்த்தை லயம், எத்தனை எளிமை, அதில் ஒரு இனிமை, தேன் தடவிய மருந்து போல் தன் எண்ணத்தை நம் மனதில் ஏற்றும் லாகவம், இலக்கியக் கவிகளுக்கு எந்தவகையிலும் குறையாத, குறையில்லாத, கவிஞன்.
கம்பர் முதல் வைரமுத்து வரை பல "கவியரசுகள்" இருந்தாலும் என்னைப் பொருத்தவரையில் அதற்கு பொருத்தமானவர் கண்ணதாசனே.
என்னைப் பாதித்த மற்றும் யோசிக்க வைத்த வரிகளில் மேலும் சில
நிலை மாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
சாதியும் பேதமும் கூறுவான் அது
வேதம் விதி என்றோதுவான்
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும்
ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் இதில்
மிருகம் என்பது கள்ளமனம் உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம்
வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்!
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
பட்டம் பதவி பெற்றவர் மட்டும்
பண்புடையோராய் ஆவாரா?
பள்ளிப் படிப்பு இல்லாத மனிதர்
பகுத்தறிவின்றிப் போவாரா?
Comments:
Post a Comment